பிராமி எழுத்து கல்வெட்டுக்கள் தமிழ்நாடு, இலங்கை

இலங்கை மற்றும் தமிழ்நாடு பிராமி கல்வெட்டுகளில் பிள்ளைகள் ஏற்படுத்திய குடைவுத் தளம் ஓர் ஒப்பீடு

srilanka inscriptions 1.jpg
srilanka inscriptions.jpg

 தமிழ்நாட்டிற் போலவே பிராமி கல்வெட்டுகள் தமிழ்நாட்டை விட பேரெண்ணிக்கையில் சற்றொப்ப  3,500 நமது அண்டை நாடான இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு குகைத் தளங்கள் இயற்கையானவை. ஆனால் இலங்கை குடைவுத்தளங்கள் ஒரு திரண்ட பாறையின் ஒரு பகுதியை குடைந்து உருவாக்கப்பட்டவை. எனவே அதிக செலவு செய்து உருவாக்கிய குடைவுத் தளங்களின் உரிமையாளர் பெயரை கல்வெட்டில் வடித்தது இன்னொருவர் அதை தனதாக்கிக் கொள்ளாது இருக்கவே என்று புரிந்து கொள்ள முடிகின்றது. கீழே இதுவரை அச்சில் வராத புதிதாக தானே கண்டு படியெடுத்து வந்த கல்வெட்டுகள் என தொல்லியல் ஆர்வலர் ஜெயரத்ன பதிர்ராராச்சி என்பவர் வெளியிட்ட நூலில் இருந்து 10 கல்வெட்டுகள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

1. பருமக விஸவ புத பருமக ரவண லெணெ (அம்பலங்கோட, IC No. )

2. பருமிக ரவண கிதிஸோஹிலி லெணெ ஸகஸ (பலங்கோட)

3. மஹரஜ ரவண புத பருமக ஈஜு புத பருமக அகிய லெணெ (அரனாயக)

 4. பருமக ஈஜு புத பருமக அகிய லெணெ (அலுலேன கேகாலை, IC No. 799)

5. பருமக அகிய புத பருமக தேஜஸ லெணெ (ராக்ஷகல தென்ன அரணாயக சியம்பலவ)

6. பருமக அகி புத பருமக தேஜஸ லெணெ (ராஜகிரிஹெல அம்பாறை ரஜகல)

7. பருமக தேஜஸ புத பருமக திமிர (கொலனிஸ்ஸாய ராவண எல)

8. பருமக திமிர புத பருமகே திக்குதஸ (மடுவத்து கவுலவ அருகில்  வில்பட்டு கவலவன் கந்த)

9. பருமக திக்குதஸ புத பருமக பகதிஸஹ (கிம்புல்வேவ – மகா ஓயா)

10. பருமக பகதிஸஹ புத்திரி பலஹ (வல்மண்டய அருகுள்ள குகை) 

பருமக என்றால் மேன்மைமிகு, முதிர்மகன், respectful man; புத / புத்த – மகன்; புத்ரி / புத்திரி – மகள். லெணெ – சமசுகிருத layana  என்ற சொல்லின் திரிபு எனப்படுகிறது. துளைக் கருத்து வேர் இல் > எல் > ல் +எ = லெணெ என்றால் பாறையை துளைத்து உருவாக்கிய குடைவுத் தளம் ஆகும். 

 

பெரு > பரு > படு என்றால் பெரிய, முதிர்ந்த, மேன்மைமிகு, respectful  என்று பொருள் கொள்ள வேண்டும். இச்சொல் குறிப்பாக கொடையாளரை சிறப்பித்து குறிக்கவே தோன்றியச் சொல்லாகத்  தெரிகின்றதே அன்றி தலைவரை (chief) குறிக்க சொன்னதல்ல. ஏனெனில் தந்தை, மகன் என்று இருவரையும் ஆள்பவர்க்குரிய மதிப்போடு ஒரே வரியில் சொல்லி இருக்க முடியாது என்பதை உணர்க. இது ஆண்பால் ஈறு கெட்ட ஒரு தூய தமிழ்ச் சொல் எனலாம். இது அந்நாளில் இலங்கையில் தமிழ்ச்  சமூகம் இருந்ததற்கு ஒரு வலுவான சான்று ஆகும். அதை கல்வெட்டில் இலங்கையின் பிராகிருத வழக்கிற்கு தக கையாண்டுள்ளனர். இந்த பருமக என்ற சொல் தமிழ் நடுகல் கல்வெட்டுகளில் பருமர் என்று வேந்தரை குறித்ததால் பருமக என்பதற்கு விளக்கம் தந்தோர் chief என்று முடிவு கொண்டாரோ என்று தெரியவில்லை. இந்த பருமன் வடஇந்தியாவில் வருமன் > வர்மன் என்றாகி இருக்கலாம். ஆனால் ப்ரமுக என்ற சொல்லின் திரிபு தான் பருமக என்று சொல்ல இலங்கை தொல்லியலாருக்கு இறுமாப்பு வேண்டும். 

புல் என்ற சிறுமை கருத்து வேரில் இருந்து புல் + து = புது > புத என்று குழந்தையை குறிக்கும். இந்த வேர் வடக்கில் புத்ர என்றாகி வடக்கே இருந்து தென்னகம் வந்த சமயக் குரவர்களால் தென்னகத்தில் தமிழுக்கு ஏற்ப புத்திரன் என்று வழங்கியது.  எடுத்துக் காட்டாக, இந்த கல்வெட்டிகளிலேயே 10 ஆம் கல்வெட்டில் மகளை புத்ரி என்று வடமொழி இலக்கணப்படி குறிக்காமல் “புத்திரி” என்று தமிழ் வடிவில் குறித்தது நோக்குக. கல்வெட்டில் பருமக என்ற சொல்லை அந்நாளைய தமிழியின் மகர வரிவடிவத்திலேயே  பெரும்பாலும்  எழுதியுள்ளனர். மேலே 6 ஆம் கல்வெட்டில் மட்டுமே அசோகர் கால பிராமியில் மகரத்தை எழுதியுள்ளனர். இதில் புழங்கும் ர, ஈ, ம, அ, ய ஆகிய எழுத்துகள் அசோக பிராமி எழுத்து வடிவில் இல்லை மாறாக தமிழியோடு பெரிதும் ஒத்துள்ளன. வட பிராமியில் போல ஒரு எழுத்தின் மேல் இன்னொரு எழுத்தை ஒட்டி எழுதும் வழக்கம் இலங்கை பிராமியில் காண்பதற்கு இல்லை. காரணம், விசய பாகு வருகைக்கு முன்பிருந்தே  இந்த எழுத்துகள் அங்கத்து மக்களிடம் புழக்கத்தில் இருந்தது தான் என்பேன். 

 

இனி, மேல் உள்ள 10 கல்வெட்டுகள் குறித்த மட்டில் முதல் கல்வெட்டில் வானபிரஸ்த துறவு ஏற்ற விஸவ என்ற தந்தைக்கு அவன்  மகன் ரவண  என்பவன் இந்த குடைவுத் தளத்தை ஏற்படுத்தினான் என்கிறது. இரண்டாம் கல்வெட்டு அந்த ரவண என்பவனை பாடி மகிழ்பவன் என்றும் அவனுடைய குடைவுத் தளம் இது என்றும் சொல்கிறது. ஆனால் யார் ஏற்படுத்தியது என்று குறிக்கவில்லை. ஆனால் அன்னதானம் (ஸகஸ) இட்டதாக சொல்கிறது. மூன்றாம் கல்வெட்டு அவனை வேந்தன் என்கிறது. இராமாயண ராவணன் பெரும் பாடகன் என்பதையும் அவன் தந்தை பிராமணன் விஸ்ரவசு என்ற கதையோடு ஒத்துப் போகின்றன முதல் இரு கல்வெட்டு வரிகள். அதன் பின் வரும் அவன் மகன் ஈஜு இராமாயணப் பெயராக இல்லை. 5 & 6 கல்வெட்டுகள் ஒரே செய்தியை சொல்கின்றன. மற்றபடி இக் கல்வெட்டுகள் 9 தலைமுறைப் பெயர்களை  குறிக்கின்றன. ரவண என்ற தந்தையின் மகன் தான் ஈஜு. ஈஜு என்பவர் இனி  தலைமுறையில் பரன் உறவு ஆகிறார், அவர் மகன் அகிய என்பவர் ஈஜுவுக்கு குடைவுத் தளம் ஏற்படுத்தினார். தலைமுறைப்படி அடுத்து அகிய என்ற சேயோனுக்கு அவர் மகன் தேஜஸ என்பவர் குடைவுத் தளம் ஏற்படுத்தினார். இந்த தேஜஸ என்பவர் தலைமுறையில் ஓட்டன் ஆகிறார், அவர் மகன் திமிர என்பவர் தேஜஸவுக்கு குடைவுத்தளம் ஏற்படுத்தினார். தலைமுறையில் இந்த திமிர என்ற பூட்டனுக்கு மகன் திக்குதஸ குடைவுத்தளம் ஏற்படுத்தினார். இந்த திக்குதஸ என்ற பாட்டனின் மகன் பகதிஸஹ  என்பவன் அவருக்கு குடைவுத்தளம் ஏற்படுத்தினார். இந்த பகதிஸஹ என்ற தந்தைக்கு மகன் இல்லை போலும் மகள் பலஹ என்பவள் குடைவுத் தளம் ஏற்படுத்தி இருக்கிறாள். வட நாட்டு பாளி, பிராகிருத வழக்கில் அசோகர் காலத்தில் பிள்ளைக்கு தாயின் பெயர் தான் குறிக்கப்படும். காட்டாக, சாரி என்பவளின் மகன் சாரிபுத்த எனப்படுவான். ஆனால் இலங்கை கல்வெட்டுகளில் தமிழ் மரபை ஒட்டி தந்தையின் பெயர் குறிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இப்படி எட்டு தலைமுறையாக இந்த துறவிகள் வாழ்தலமென்னும் குடைவுத் தளத்தை (லெணெ / பள்ளி) பெற்ற பிள்ளைகள் ஏற்படுத்தியதை பார்த்தால் இது புத்த மதம் சார்ந்த கல்வெட்டா அல்லது துறவு பூண்ட தந்தைக்கு மகன் ஏற்படுத்திய பிராமணத் துறவு வாழ்க்கை முறை கல்வெட்டா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில்  தமிழ்நாட்டு தமிழி கல்வெட்டுகள் இதே முறையில் தான் அமைந்துள்ளன என்பதே காரணம். மேலும் வட பிராமி மகர எழுத்தை வைத்து 6 ஆம் கல்வெட்டை தேவநம்பிய திஸ்ஸன் & அசோகன் காலத்ததாக கொண்டால் விஸவன் வாழ்ந்த காலம் கி.மு. 4 ஆம் தொடக்கம் அல்லது 5 ஆம் நூற்றாண்டு இறுதி என கொள்ள வைக்கிறது. எனவே இது கிமு 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனலாம். அப்போது இலங்கையில் புத்த மதம் இல்லை. எனவே இது புத்த மதம் சார்ந்தது அல்ல என்று உறுதி ஆகின்றது அன்றோ? புத்த மதத்தவர் குடும்பத்தில் தந்தைக்கு மகன் எவரேனும் குடைவுத் தளம் அமைப்பாரோ? இல்லையே. பின் எங்கே பெரும் பிழை நேர்ந்துள்ளது என்றால் “ஸகஸ” என்ற சொல்லை ஸங்கஸ்ய இதாவது, புத்த சஙகத்திற்கு ஒப்படைத்தார் என்று காட்டுவதில் தான் உள்ளது. இனி, இந்த ஐயத்திற்கு வலு சேர்க்கும் மேலும் சில கல்வெட்டுகளை அடுத்ததாக காண்போம். 

பமண மிஸகுட கோதமஸ லெணெ. அகத (IC No.656, Situlpavuva)

பிராகிருதத்தில் ரகர ஒலிப்பு ஒடுங்கி ப்ராமண என்ற சொல் பமண என்றாகும். அங்கே நெடில் குறிலாகும். உச்சிக் குடுமி / கொண்டையை குறிக்கும் தமிழ்ச் சொல் மிசைகுடுமி இங்கு மிஸகுட என்று சிதைந்து ஒலிக்கின்றது. இதை மருகுட என்று பிழையாக படித்து அச்சிட்டுள்ளனர் Inscriptions of Ceylon, Vol I, No. 656 இல். இக் கல்வெட்டின் பொருள் “பிராமணன் உச்சிக் கொண்டை கௌதமனுடைய குடைவுத் தளம் இது ஆகும்”. யார் அமைத்துத் தந்தார் என்பது குறிக்க இல்லை. இப்போது புராணங்களில் முனிவர், ரிக்ஷிகள் விவரிக்கப்படும் உருவத்தை மனதில் கொண்டு வந்தால் அகத்தியர் உச்சிக் கொண்டை நம் கண் முன்னே வரும். புத்த மத பிக்குகள்  பெரும்பாலும் மொட்டை அடித்து விடுவர். எனவே இங்கும் புத்த மத தொடர்பே இல்லை. ஆனால் பெரும்பால் கல்வெட்டுகளில் “அகத அனகத சதுதிஸ ஸகஸ தினே” என்று வாக்கியத்தை பொதுச் சட்டமாக எழுதி இருப்பர். இந்த சட்டம் சொல்வது என்ன? வந்தவர் வராதவர் என ஊரும் ஆள் பெயரும் அறியாத நாற்றிசை மக்களுக்கு உணவு (அன்னதானம்) வழங்கப்பட்டது, துறவு ஏற்ற நாளில் (தினே) என்பது தான் அதன் பொருள். இந்த தின, தினே என்ற கல்வெட்டுக் குறிப்பை இலங்கை தொல்லியலார் அறவே கண்டு கொள்ளவே இல்லை,  “ஸகஸ” என்ற ஒற்றைச் சொல் மட்டும் தான் கண்ணில் பட்டுள்ளது. அதை வைத்து புத்த சங்கத்திற்கு இந்த குடைவுத் தளத்தை கௌதமர் ஒப்பளித்தார் என்று சொல்லுவது எத்தனை வரலாற்று மோசடி!!  மாற்று மதத்தவரான பிராமண கௌதமர் எவ்வாறு குடைவுத் தளம் ஏற்படுத்தி அதை புத்த சங்கத்திற்கு வழங்குவார் என்றல்லவா கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்? இத்தனைக்கும் இந்த கல்வெட்டின் இறுதிச் சொல்லே “அகத” என்பதோடு முடிகிறது. அதற்கு அடுத்த வாக்கியஙகள் பொறிக்கப்படவில்லை.

நான் inscriptions of Ceylon, Vol I என்ற நூலை முழுமையாக பார்த்த வரை பிக்கு என்ற சொல்லாட்சி இடம்பெறும் புத்த கல்வெட்டுகள் 1 அல்லது 2 தான் உள்ளன. இந்நூலில் சமண, ஆசீவக, கபாலிக, சிவனியர், வணிகர்  கல்வெட்டுகள் சில உள்ளன அவற்றையும் புத்த சங்கத்திற்கு என்று காட்டியது பெருத்த வரலாற்று மோசடி என்று தான் சொல்ல முடியும்.

உபஸிக ஸிரிபலிய லெணெ. அகத அனகத ந வேததஸ ஸகஸ தினே (IC No. 316, Mutugalla) 

உபாசிகை ஸ்ரீபலியாள் ஏற்படுத்திய குடைவுத்தளம் இது. துறவு ஏற்ற யாருக்காக இது அமைக்கப்பட்டது என்று குறிக்கவில்லை. வந்தவர் வராதவர் என வைதிகத்தில் ஊன்றப் பெறாத  மக்களுக்கு துறவு ஏற்ற நாளில் (தினே) உணவு (ஸகஸ) இட்டதாக சொல்கிறது கல்வெட்டு. இதாவது, பொது மக்களுக்கு இட்டதாக சொல்கிறது.

தந்திரயோக துறவு வாழ்வு புகுமுன் இல்லற பிராமணர் ஸுதர்ஸனர், தேவி போன்ற தெய்வங்களை தீவிரமாக வேண்டி விரதம், நோன்பு இருந்து, நாடோறும் 1,000 / 10,000 முறை பெயர் உச்சரித்தல் என்று இயங்குவர். இவர்கள் தீவிர பக்தர்கள். இப்படிப்பட்டோரை தான் உபாசகர் என்போம். இவருள் சிலர் குறி சொல்வதும் உண்டு. தமிழ்நாட்டு தமிழி கல்வெட்டுகளில் உபசன் என்று குறிப்பது இத்தகையோரையே. இலங்கை கல்வெட்டுகள் (IC) எனும் நூல் இவர்களை lay devotee என்று சாதாரணமாக குறிப்பிடுகின்றது. கல்வெட்டில் சதுதிஸ என்று குறிப்பதற்கு பதில் “ந வேத தஸ” என்று தப்பாக பொறித்து விட்டதாக நூலில் வலிந்து விவரித்து உள்ளனர். ஏனென்றால் வேதம் நான்கு தானாம் பத்து அல்லவாம். சுக்கிர தஸ, சனி தஸ என்பதில் வரும் தஸயை பத்து என கொண்டது இலங்கை தொல்லியல் துறையார் தவறு அன்றோ? குடைவுத் தளம் ஏற்படுத்தியவர் ஏதும் இங்கே தப்பாக குறிப்பிட வில்லை என்பதை உணர்க. இப்படி கூறி உபாசகி ஸ்ரீபலியாள் புத்த சங்கத்திடம் குடைவுத் தளத்தை ஒப்படைத்ததாக பொய் உரைத்து உள்ளனர். அப்படியானால் இங்கே வேதத்தை குறிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது? 

பத மித தேவஹ லெணெ / பத மித தேவஹ லெணெ மயபதஸனே. அகத அனகத சதுதஸ கஸ்ஸ தினி. (IC No.167, Nattukanda)

வேதம், சமசுகிருதத்தில் வல்ல பட்டன் மிததேவன் ஏற்படுத்திய குடைவுத்தளம் இது. பட்டன் மிததேவன் ஏற்படுத்திய குடைவுத் தளம். வந்தவர் வராதவர் என நாற்றிசை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது துறவு நாளில் (தினி) என்கிறது. மனபதஸனே என்பதை மயபதஸனே என்று பொறித்தால் அதன் பொருள் சொர்க்க வாசல் என்று ஆகும். மனபதஸனே என்பது குடைவுத் தளப் பெயர் என்று குறித்துள்ளனர். முதலில் வந்தவர் வராதவர் வாசகம் எழுத முடியவில்லை என்பதாலோ என்னவோ அதை நிறைவு செய்ய முதற் செய்தியையே மீண்டும் பொறித்துள்ளனர். சதுதிஸ என்பதை தவறாக சதுதஸ என்று கல்வெட்டு பொறித்துள்ளனர். ஸகஸ என்றாலும் கஸ்ஸ என்றாலும் உணவு என்று தான் பொருள். இங்கும் “கஸ்ஸ”வை ஸகஸ என்று வலிந்து ஏற்றுக் கொண்டு புத்த சங்கத்திற்கு குடைவுத் தளத்தை அர்ப்பணித்ததாக விளக்கி உள்ளனர். எங்கே சிந்தனைக் குறைபாடு உள்ளது என்றால் பத (bata) என்ற சொல்லுக்கு பிழையாக Lord என்று பொருள் கொண்டது தான். பிராகிருதத்தில் Lord என்பதற்கு சொல் தேடினால் நாத என்று தான் இணைய தேடல் தருகின்றது. Butta என்ற சொல் Bata என்று தான் பிராகிருதத்தில் கொச்சையாக திரிந்து வழங்கும். அந்த வகையில் பத என்பது வேத பண்டிதன் என்றே பொருள்படும். சோழர் காலக் கல்வெட்டுகளில் பட்டன் பிராமணரை மட்டுமே குறிக்கும் சொல். மாற்று மதத்து பிராமணன் தன் பகை மதமான புத்த சங்கத்திற்கு ஒருகாலும் குடைவுத் தளம் ஏற்படுத்தி தரமாட்டான் என்பது பகல் வெளிச்சம் போன்ற உண்மை ஆகும். பமண (brahmin)  என்ற சொல் புழங்கும் கல்வெட்டுகள் 23 எண்ணம் Inscriptions of Ceylon, Vol I இல் காட்டப்பட்டுள்ளன என்றால் அதைவிட Bata (பத) என்ற சொல் புழங்கும் கல்வெட்டுகள் தொகையில் இன்னும் அதிகம் உள்ளன. ஆனால் அவற்றின் தலைவிதி Lord என்று காட்டி உண்மையை மறைத்துவிட்டனர். உண்மை என்றோ ஒரு நாள் வெளிப்பட்டே ஆக வேண்டும் என்பது அவற்றின் விதி போலும். இப்படியாக பல கல்வெட்டுகள் புத்த மதத்தோடு வலிந்து பொருத்திக் காட்டப்பட்டுவிட்டன.

எர கபி கமிக புத கமிக திஸ புதி உதிய லெணெ. அகத அனகத சதுதிஸ ஸகஸ தினே. தமரஜஸ உபஜனே மூர (IC No. 168, Nattukanda) 

இறைகவி என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத திரிபு தான் எரகபி என்பது. தெய்வப் பாடகரான நாடோடிப் (கமிக) பாடகரின் புதல்வர் நாடோடி திஸனுக்கு அவன் மகள் உதிய என்பவள் ஏற்படுத்திய குடைவுத் தளம் இது என்கிறது கல்வெட்டு. வந்தவர் வராதவர் என நாற்றிசை ஊரும் பெயரும் அறியப்படாத மக்களுக்கு உணவு (அன்னதானம்) துறவு நாளில் (தினே) வழங்கப்பட்டது. தமாரம் (பம்பை, உடுக்கை போன்ற ஒன்று) அடிக்கும் இசைக்குழுவின் பக்கவாத்தியக் காரர் (உபஜனே – கீழ்மக்கள், subordinates) மூவர் இதில் பங்கு பெற்றனர் என்கிறது கல்வெட்டு. தமாரம் Dolak போன்றது‌. ‘மூ’ அசோக பிராமியில் எழுதப்பட்டு ரகரம் அடிக்கோடாக இடப்பட்டுள்ளது. இதை அவர்கள் படிக்கவில்லை, நான் தான் படித்தேன். உபஜனே என்பதை உபத என படித்து அச்சிட்டு தப்பாக விளக்கி உள்ளனர். கமிக என்பதை கம > காம > க்ராம என்று தவறான பொருள் கொண்டு villager, village council chief என்று பொருந்தாத பொருள் தந்து உருக் குலைத்து விட்டனர் இலங்கையர். இங்கு கம என்றால் நகர்தல், இடம் பெயர்தல், wandering என்றே பொருள்.  

தமரகித தேரஹ லெணெ. அகத அனகத சதுதிஸ ஸகஸ தினே. கமனே அபயஸர கியஹி கரிதே.

தமாரம் அடித்தபடி பாடுவதில் தேர்ந்தவருக்கு துறவு வாழ்வு புகும் நிலையில் ஏற்படுத்திய குடைவுத்தளம் இது. அவர் பெயர் இங்கு குறிக்கப்படவில்லை. வந்தவர் வராதவர் என நாற்றிசை மக்களுக்கு உணவு துறவு நாளில் வழங்கப்பட்டது. நாடோடிப் (கமனே) பாடகரில் உடன்திரியும் (அபயஸர) பாடகர்கள் இந்த குடைவுத் தளத்தை செய்தனர் என்கிறது கல்வெட்டு. (IC No. 76, 353,364,367 ஆகியன இது போன்ற தமார பாடகர் கல்வெட்டுகள் தாம். பாட்டு பாடி பிச்சை எடுப்பர் இந்த பாடகர். ஆனால் இலங்கை தொல்லியளார் எந்த கஷ்டமும் படாமல் தமரகித என்பதை ஆள் பெயராக காட்டிவிட்டனர். வல்ல என்ற பொருள் தரும் தேர்ந்த என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உண்டானது தான் தேரஹ என்ற வினைவன்மை சொல். இதை பின்னாளில் உருவான தேரவாத விளக்கமான முதிர்ந்த என்ற கருத்தோடு பொருத்தி elder என அச்சொல் புழங்கும் எல்லா இடத்திலும் காட்டிவிட்டனர். இசைப் பாட்டை புத்த மதம் ஆதரிக்காது. ஆனாலும் பொருத்தமில்லாமல் இந்த குடைவுத் தளம் புத்த சங்கத்திற்கு கொடுக்கப் பட்டதாக சொல்லுவர்.

புன தேரஹ ஸதிவிஹரிய பத ஸகர கிதஹ லெணெ ஸகஸ (IC No. 668)

புல்லுவன் வீணை போன்று ஒரு கம்பியில் உரசும் வில் கருவி தான் இந்த புன என்பது. புல்லு வீணையில் தேர்ந்தவர்,  சதா சர்வ காலம் திரிந்தபடி (ஸதிவிஹரிய) உள்ள பட்டனான (பிராமணன்) சேர்ந்திசை பாடகனுக்கு (ஸகர கிதஹ) ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. உணவு வழங்கப்பட்டது என்பதை புத்த சங்கத்திற்கு ஒப்பளிப்பு என காட்டி உள்ளனர். இதில் வழங்கும் விஹரிய என்பதற்கு திரிதல், உழலுதல் என்பதே பொருள் விகாரை என்பதல்ல. இப்படி இசை மூலம் பிச்சை எடுத்து வாழும் இவர் பெயர் குறிக்கப்படவில்லை. புத்த மதத்தில் இசைப் பாட்டு ஊக்கப்படுத்தப் படவில்லை என்பது இந்த கல்வெட்டு புத்த மதத்தது அல்ல என்று காட்டிவிடும்.

ஜொதி தேரஹ (புதஹ) மஹஸுதஸனி உபஸக திஸய தேரஹ நாக லெணெ (Ancient Inscriptions in Ceylon by Edward Muller, page 32, Wirandagoda Mukulaana) 

ஜோதிடத்தில் தேர்ந்தவருடைய (பெயர் இல்லை) மகன் மகாசுதர்சன உபாசகன், திஸ்ய என்னும் தேர்ந்தவன் படமெடுத்த பாம்பு வடிவில் குடைவுத்தளத்தை ஏற்படுத்தினான் என்கிறது கல்வெட்டு. 

Note: Sakasa (सकस) means fertile, nutritious, or wholesome. Sakasa (सकस) is a Marathi adjective that means nutritious, wholesome, or fertile. It is often used to describe food that is rich in nutrients, full of goodness, or providing substantial nourishment. 

In Prakrit, gasa (गस) primarily relates to the Sanskrit root (ग्रस्), which means “to eat,” “to swallow,” “to devour,” or “to consume”. உஞ்சவிருத்தி 

புல்லுவன் வில் >  https://youtu.be/Pphv9Yx1gpU?si=uNAyI0MWyywQV8i4

 

உஞ்சவிருத்தி  >   https://youtu.be/9RcyT7GvUAQ?si=UkVj8yFVdaPrAawm

இந்த பதிவு எந்த மதத்தையும் தூக்கி பிடிக்கவோ அல்லது தாழ்த்தி மட்டம் தட்டவோ உண்டானது அல்ல. பிழைபட்ட விளக்கத்திற்கு இலங்கை தொல்லியல் துறையே முழுப் பொறுப்பு என்று காட்டத்தான் அன்றி வேறல்ல நோக்கம். தந்திர யோகத்தை பழகும் பழைய வானபிரஸ்த துறவு பிராமண மதமானது புராண மதத்தை பிராமணர் ஏற்ற பிறகு 1,300 ஆண்டுகள் முன் அழிந்துவிட்டது. இந்த இலங்கை கல்வெட்டுகளே அதற்கு சான்றாக நிற்கும் எலும்புக் கூடுகள். நான் செய்வது அந்த எலும்புக் கூட்டின் மரபணு ஆய்வு தான். இக்குடைவுத் தளங்கள் யாரும் அற்ற பாழ் இடங்களாகவோ அல்லது புத்த விகாரைகளாகவோ பின்னாளில் ஆகிவிட்டன.

ஆங்கிலரைத் தொடர்ந்து சிங்களர் மேற்கொண்ட தவறான வரலாற்று பார்வையை திருத்த இந்தியாவில் இருந்து பிராகிருத, சமசுகிருத அறிஞர்களை கொண்டு இலங்கையின் ஸ்வஸ்தி, சித்தம் என தொடங்கும் கல்வெட்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை அனைத்தையும் மறுபார்வை செலுத்தி சரியான விளக்கத்தை  வெளியிட வேண்டும். இது இலங்கை கல்வெட்டு வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமையும். இனி, தமிழ்நாட்டில் அமைத்துள்ள இத்தகு  குகைத்தள கல்வெட்டுகளை ஒப்பு நோக்குவோம்.

 

அரிட்டாபட்டி  கல்வெட்டு 2:2  நீர்வடி விளிம்பின் மேலே ஒரு வரியில் காணப்படும் கல்வெட்டு. 

இலஞ்சிய் எளம் பேராஅதன் மகன் எமயவன் இவ் முழ உகைய் கொடுபிதவன்  

விளக்கம்: இலஞ்சி எனும் ஊர் வாழ் இளைய பேராதன் மகன் எமயவன் இந்த குகை தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தான் என்கிறது கல்வெட்டு. ஒற்று சேர்த்து கொட்டுபித்தவன் என்று படித்தால் கொடையளித்தவன் என்றாகிறது. 

அரிட்டாபட்டி கல்வெட்டு 2:3, இது 33 எழுத்துகள் கொண்டது.  

இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல் முழாஉகை கொடுபிதவன்  

விளக்கம்: இலஞ்சி எனும் ஊர் வாழும் வேள் / அரையன், மீனவர் தலைவன் (மாப்பரவன்) மகன் எமயவன்  செம்மையான  குகைத் தளத்தை கொடையளித்தான் என்கிறது கல்வெட்டு. ஒரே செய்தி இரண்டு இடங்களில் பதியப்பட்டதானது இரு துறவிகளுக்கு கொடுத்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஆசீவகர், பிராமணர், சமணர் யாருக்கு  தரப்பட்டது என்று தெரியவில்லை.

விக்கிரமங்கலம் கல்வெட்டு 8:3. இது பெரிய குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கை ஒன்றின் தலைப் பகுதி மேல் காணப்படுகிறது. 

அந்தைய் பிகன் மகன் வெந்அதன் 

விளக்கம்: பிராமணத் துறவி பிக்கனுடைய மகன் வெண்அதன் ஏற்படுத்திய குகைத்தளம் இது. ஒற்று சேர்த்து பிக்கன் என்று படிக்க வேண்டும். துறவில் புகுந்த தந்தைக்கு வழிவழி வந்த மத வழக்கப்படி மகன் இப்படி வாழிடம் அமைக்கிறான்.      

மேட்டுப்பட்டி கல்வெட்டு 9:8 கீழ்வரிசை கற்படுக்கையில் பொறிக்கப்பட்டுள்ளது.  

குவிர அ(ந்தை) சேய் அதன் 

விளக்கம்: கெவி என்றால் பள்ளம், குகை என்று பொருள். குவி திரிபு கெவி. குகை வாழ்க்கை மேற்கொண்ட (குவிர) பிராமணத் துறவிக்கு மகன் அதன் என்பவனால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட குகைத்தளம்  இது என்கிறது கல்வெட்டு.   

புகளூர் கல்வெட்டு 20:5 தென்திசையை நோக்கி உள்ள குகைத்தளத்தின் கிழக்கில் சிறு குகை ஒன்று அமைந்துள்ளது. அதன் சீர்படுத்தாத தரையில் இரு வரிகளில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது துறவு ஏற்ற தந்தைக்கு மகள்  செய்தளித்தது ஆகும்.

நலி(ய்) ஊர் ஆ பிடன் குறும் மகள் / கீரன் கொறி செயிபித பளி  

ஆ – அவ்விடத்து என்னும் இடச்சுட்டு; பள்ளி – கற்படுக்கை    

விளக்கம்: நல்லியூரை சேர்ந்த பிட்டனுடைய இளைய மகள் கீரன் கொற்றி தந்தைக்கு செய்வித்த கற்படுக்கை என்று பொருள். லகர மெய் சேர்த்து நல்லி எனவும், பிடனில் டகர மெய் சேர்த்து பிட்டன் எனவும், கொறியில் றகர மெய் சேர்த்து கொற்றி எனவும், செய்பித என்பதில் தகர மெய் சேர்த்து செய்பித்த எனவும், பளி இல் ளகர மெய் சேர்த்து பள்ளி எனவும் படிக்க வேண்டும்.  

புகளூர் கல்வெட்டு 20:6 மேற்கண்ட அதே குகையில் உள்ள கற்படுக்கையின் மேல் இக்கல்வெட்டு ஒரு வரியில் பொறிப்பிக்கப்பட்டு உள்ளது. 

நல்லி(ய்) ஊர் ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி அதிடானம் 

பிட்டந்தை – பிட்டன் என்ற பிராமணத் துறவி; அதிட்டானம் – மலை மேல் அமைந்த இருப்பிடம்.  

விளக்கம்: முன்னைய கல்வெட்டு செய்தியே சில சொல் மாறுபாட்டுடன் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது. நல்லியூரை சேர்ந்த பிட்டன் என்ற பிராமணத் துறவியின் மகள் கீரன் கொற்றி என்பவள் ஏற்படுத்திய உறைவிடம் என்று பொருள். வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தில் ஈடுபட்ட பிட்டன் நால் வகை ஆசிரம வாழ்க்கை நெறிப்படி வனப்பிரஸ்தம் என்ற முறையில் ஈடுபடுகிறான். அதற்கு இயைப அவனுடைய இளைய மகள் இந்த உறைவிடத்தை அமைத்துக் கொடுத்தாள்.      


நெகனூர்பட்டி கல்வெட்டு 27:1. கல்வெட்டை சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு அதன் உள் நான்கு வரிகளில் எல்லா மெய் எழுத்துகளும் குறிக்கப்பட்டுள்ளது.  

பெரும் பொகழ் / சேக்கந்தி தாயியரு / சேக்கத்தண்ணி செ / யி வித்த பள்ளி 

சேக்கு – கன்னக் குடுமி, ஈழத்தில் ஒருபக்க காதுப் புறத்தில் முடிக்கும் குடுமியை “கன்னக்குடுமி” என்பர். அந்தணி – அந்தை என்ற பொதுச் சொல்லுக்கு பால் வேறுபாடு காட்டும் பெண் பால் சொல் அந்தணி, பிச்சை கொண்டு வாழும் பெண் துறவி; ஆண் பால் சொல் அந்தணன். சேக்கு + அந்தி – கன்னக் கொண்டை இட்ட அக்காள், இளையவள்     

விளக்கம்: பெரும் புகழ் எய்திய கன்னக் கொண்டையிட்ட அக்காள் தன் தாய் கன்னக் கொண்டை துறவாட்டிக்காக செய்வித்த குகைத்தள படுக்கை இது. இவள் தேவி உபாசனை, சுதர்சன உபாசனை மூலம் குறி சொல்லும் தகுதியால் பெரும் புகழ் எய்தி இருக்கலாம்.     

மாங்குளம் கல்வெட்டு 1:4 மேற்கண்ட குகைத்தளத்தின் மேல் மற்றொரு குகைத்தளத்தில் காணப்படும் ஒரு வரி நீண்ட கல்வெட்டு இது  

கணிஇ நதஸிரிய் குவன் _ _ வெள்அறைய் நிகமது காவதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்      

நிகமத்து – ஊரின்: காவிதி – பெண் துறவி, ascetic; காழி – உடலுழைப்பு துன்பம், திக்கர் – தவிர்த்தவர். காழிதிக்கர் என்றால் உடலுழைப்பு தவிர்த்து பிச்சை எடுத்து வாழ்பவர்; அந்தை –  பிராமணத் துறவி பால் சுட்டாத சொல்; பிணவு – தங்கிடம்.   

 

விளக்கம்:  வெள்ளறை என்னும் ஊரில் பிச்சை கொண்டு வாழ்ந்து வரும் பிராமணத் துறவாட்டியின் மூத்த மகன் (அ+ஸுதன்) ஆசீவக ஆசான் கணி நந்தாசிரியரின் கல்விச் சாலையில் வேத பாடம் பயிற்றுபவனிடம் (குவ்வன்) நந்தாசிரியர் பொருட்டு இந்த தங்கிடமான  குகைத் தளத்தை கொடுத்தான் என்கிறது கல்வெட்டு. ககர மெய் சேர்த்து திக்க என்று படிக்க வேண்டும். இக்கல்வெட்டில் புழங்கும் குவ்வன், காவிதி அந்தை, அவளது மூத்த மகன் இவ் மூவருமே வாழ்க்கை முறையால் பிராமணர் ஆவர். ஆசீவகர் கணி நந்தாசிரியர் வேத பாடம் சொல்பவனுக்கு ஆதரவளித்ததை வைத்து பார்த்தால் அவரும் பிராமண குடியில் பிறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். கணி என்பது தியானத்தில் ஒரு நிலையை எய்தியவர் கொள்ளும் பட்டம் ஆகும். இனம் தன் இனத்திற்கு ஆதரவாக இருக்கும் என்ற உலக முதுமொழிப்படி பிராமணர் வேதக் கல்விக்கு ஆதரவு தருவது இயல்பானது தானே. மேலும், ஆசீவகம் அப்போது தான் தோன்றிய புது மதம். அதற்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று எவரும் அப்போது இருந்திருக்க முடியாது. எனவே நந்தாசிரியர் தன் பிராமண இனத்தில் தன் புது மதக் கருத்தை பரப்பி இருக்கலாம். ஐயன் என்பது ஒருமை ஐயனார் என்பது அதன் மதிப்புறு ஒருமை ஆகும். இங்கே ஐயர், ஐயனார் ஆகிய சொற்களின் பொருள் ஒற்றுமையை உணர்க. எனவே நந்தாசிரியர்  பிராமணரிடம் ஆதரவு தேடி உள்ளார் என்று கொள்ளலாம். பெண் துறவாட்டியின் மூத்த மகன் இங்கே குறிக்கப்படுவதில் இருந்து பெயர் குறிக்கப்படாத அவள் பிராமணர் கடைபிடித்து வந்த நால்வர்க்க வாழ்க்கை முறையான பிரம்மச்சரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற முறையின்படி முதுமையில் துறவு ஏற்றவள் என கொள்ளலாம். இன்றும் வைணவ மட ஜீயர்கள் இல்லறத்திற்கு பின் துறவறம் புகுவதை ஒப்பு நோக்குக. தமிழ்ச் சங்க இலக்கியம் முக்கோல் பகவர் என்பதும் இவர்களைத் தான்.

பிழை எங்கே உள்ளது என்றால் இலங்கையின் இந்த குடைவுத் தளங்கள் பிற்காலத்தில் புத்த மத மடங்களாக, விகாரைகளாக மாறிவிட்டதை வைத்து 150 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக அங்கு தொல்லியல் ஆய்வு மேற்கொண்ட ஆங்கில அறிஞர்கள் அங்குள்ள கல்வெட்டுகள் யாவும் புத்த மதம் சார்ந்தவை என்று தவறான முடிவு கொண்டனர். அந்த கண்ணோட்டத்திலேயே இந்த குடைவுத் தள கல்வெட்டுகளுக்கு தப்பும் தவறுமாக விளக்கம் தந்துவிட்டனர். அந்த பிழையை பின்வந்த சிங்கள ஆய்வாளராவது சீராக மறு ஆய்வு செய்து தவற்றை திருத்தி இருக்க வேண்டும். ஆனால் தவறு இன்றும் தொடர்கின்றது. இனி வரும் தலைமுறை தான் அதை திருத்த வேண்டும். அதே போக்கில் தான் தமிழ்நாட்டு குகைத்தள தமிழி கல்வெட்டுகளை அடர்வு செய்து நூல் வெளியிட்ட திரு. ஐராவதம் மகாதேவன் அங்குள்ள சமண சின்னங்களை கண்ணுற்று அந்த தமிழி கல்வெட்டுகள் யாவும் சமண மதம் சார்ந்தவை என்று பிழைபட கூறிவிட்டார். அவர் கல்வெட்டுகள் சொல்லும் செய்தியின் பொருள் என்ன என அறிந்திருந்தால் உண்மை எது என்று அப்போதே விளங்கி இருக்கும். உண்மையில், அந்த குகைத் தளங்களில் ஏற்பட்ட சமண சின்னங்கள் பிற்காலத்தில் பல்லவ, பாண்டியர் ஆட்சியில் வந்தவை. ஆனால் அந்த குகைத் தளங்களோ  பிற மதத்தவரால்  அதற்கும் முற்பட்ட காலத்தில் ஏற்பட்டவை.    

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தக்க முறையில் தம் தருக்க கருத்துகளை முன் வைத்து ஆசீவக மத நிறுவனரான நந்தவாச்சாவின் கல்வெட்டுகள் தாம் இந்த மாங்குளம் கல்வெட்டுகள் என்று கூறியதை அடுத்து மாங்குளம் கல்வெட்டுகளின் காலம் மகாவீரரின் சம காலத்தவரான கணி நந்தாசிரியர் கிமு 6 ஆம் நூற்றாண்டினர் என்பதால் அவை கிமு 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் என்றார். தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதனும் மாங்குளத்தின் முதல் எண்ணிட்ட பணஅன், கடல்அன் வழுதி என்ற கல்வெட்டில் ஆண்  பால் ஈறு “அன்” புணர்த்தாமல் எழுதப்பட்டுள்ளதை வைத்து இது அசோகர் காலத்தது அல்ல அதற்கும் பழமையாக கி.மு 5 ஆம் நூற்றாண்டிற்கு மேல் செல்லும் என்றார். இப்படி இந்த மாங்குளம் கல்வெட்டுகள் சமணம் என்ற கருத்து வலுவிழந்து ஆசீவகம் என்ற கருத்து  வலுப்பெற்றது. 2021 இல் இக்கல்வெட்டுகளை நான் விளக்கப் புகுந்த வேளையில் இவற்றில் இடம்பெறும் அந்தை என்ற சொல் சமணம் குறித்ததல்ல என்று உணர்ந்தும், அவற்றில் மகனோ அல்லது மகளோ தந்தைக்காக குகைத்தளம் அமைத்ததை வைத்து இந்த வாழ்க்கை முறை பிராமணர் கடைபிடித்த நால்வர்க்க வானப்பிரஸ்த சந்நியாச முறையில் இருப்பதால் அந்தை, அந்தணி, அந்தணன் ஆகிய சொல் வழங்கும் கல்வெட்டுகள் பிராமணர் சார்ந்த கல்வெட்டுகள் என்று நிறுவினேன். ஆக தமிழ் நாட்டு தமிழி கல்வெட்டுகள் ஆசீவகம், பிராமணம், சமணம் ஆகிய மூன்று மதங்கள் சார்ந்தவை ஆகின்றன. இலங்கையின் குடைவுத் தள கல்வெட்டுகள் என் இந்த கருத்திற்கு இப்போது இன்னும் உரம் சேர்கின்றன. தமிழ்நாட்டின் இந்த பிராமணத் துறவு வாழ்க்கை முறைக்கு பிள்ளைகள் பங்களிப்பு ஆற்றிய கல்வெட்டுகள் போன்றவை தான் இலங்கையின் பெரும்பாலான குடைவுத் தளக் கல்வெட்டுகள். தமிழி கல்வெட்டுகள் இவற்றை பிராமண வாழ்க்கை முறை கல்வெட்டுக்களாக அடையாளப்படுத்த உதவுகின்றன.  அவற்றில் தந்தை, பிள்ளை உறவு முறை பங்களிப்பை வைத்து இது முடிவு கொள்ளப்பட்டது. எனவே இலங்கையிலும் புத்த மதத்திற்கு முன் பிராமண, சமண சமயத்தவர் கல்வெட்டுகள் குடைவுத் தளங்களில் காணப்படுகின்றன. சில கல்வெட்டுகளில் வெளிப்படையாகவே பிராமணரை ‘பமண’ என்று குறிப்பதாக உள்ளன. தமிழ்நாட்டை விட இலங்கையில் தான் பிராமணர் கல்வெட்டுகள எண்ணிக்கையில் நூற்றுக் கணக்கில் உள்ளன. 

இனி, ‘அண்’ என்ற உயர்வுக் கருத்தில் இருந்து அண்+து = அந்து > அந்தை > அந்தணி ஆகிய சொற்கள் தவ வாழ்விற்காக துறவு  பூண்டவரை மேன்மைபட குறிக்க உண்டாயின. தொடக்கத்தில் அந்தண என்ற சொல் எல்லா சாதி துறவிகளையும் உயர்வுபட குறித்தாலும் கால ஓட்டத்தில் அச்சொல் பின்னர் பிராமணருக்கே உரித்தாகி விட்டது. அதே பொருளில் இலங்கையில் அமைந்த சொல் தான் பருமக என்பதும். அந்தை என்ற சொல் துறவு ஏற்றவரை மட்டுமே குறித்தது அதே நேரம் பருமக என்ற சொல் துறவு ஏற்ற தந்தையோடு துறவுக்கு ஏற்பாடு செய்த மகன், மகளையும் குறித்தது என்பதே வேறுபாடு. 

Published by

Unknown's avatar

Muthukumar

I am interested in writing social issues in Tamil. Also interested in learning.

Leave a comment